பலஸ்தீனில் ஊடகவியலாளர்கள் கொலைக்கு FMETU கண்டனம்!

– இலங்கையில் உலக ஒற்றுமை தினம் அனுஷ்டிப்பு

காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பும் (IFJ) மற்றும் அதனுடன் இணைந்த ஊடக அமைப்புகளும் பெப்ரவரி 26ஆம் திகதியை உலக ஒற்றுமை தினமாக அறிவித்துள்ளன.”ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துங்கள்!” எனும்  கோஷத்துடன் இந்த பலஸ்தீன ஒற்றுமை தினம் அறிவிக்கப்பட்டது.இஸ்ரேல் படையினரால் காசாவில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து, ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU) நேற்றைய தினம் (26) ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்திருந்தது.

பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு, ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (FMETU) கொழும்பு 05, ரெயின்போ இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டுடன் இணைந்தவாறு ஒத்துழைப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

     

சம்மேளனத்தின் செயலாளர் தர்மசிறி லங்காபேலி, தலைவர் கிருஷ்ணீ இபாம், தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர, யாழ்.ஊடக கழகத்தின் வி. செல்வகுமார், சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் ஷெரிபா தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டு பலஸ்தீன பத்திரிகையாளர் சங்கத்திற்கும் பலஸ்தீனத்திற்கும் தமது ஆதரவை தெரிவித்தனர்.

 

இந்த இனப்படுகொலைப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவும், பலஸ்தீன மக்கள் தங்களுக்கு சொந்தமான சுதந்திர நாட்டில் வாழும் வாய்ப்பை வழங்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளிட்ட உலக வல்லரசுகளிடம் வலுவான கோரிக்கையொன்று இங்கு முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக, 102 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களையும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைகளையும் கொன்று குவித்து இஸ்ரேல் நடத்திவரும் கொடூர இனப்படுகொலைப் போரை உடனடியாக நிறுத்துமாறு ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் வலியுறுத்தினர்.

உதயன் ஆசிரியருக்கு எதிரான CID விசாரணை: கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது

“உதயன் பத்திரிகையின் ஆசிரியர் தங்கராசா பிரபாகரன் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கிருலப்பனை அலுவலகத்தில் 27.11.2023 அன்று விசாரணை நடத்தப்பட்டமை தொடர்பில் யாழ். ஊடக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையுடன் முழுமையாக இணங்கும் வகையில் FMETU வெளியிடும் அறிக்கை…

“இலங்கை ஊடகங்கள் – உரிமைகளுக்காக பொறுப்புடன் முன்னோக்கிய நடையில்” – IFJ-UTU 2023 நிகழ்ச்சி: இறுதிச் செயல்பாடு

 IFJ-UTU 2023 நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிச் செயற்பாடு கடந்த நவம்பர் 23 ஆம் திகதி மு.ப. 10.00 மணி முதல் இடம்பெற்றது. “இலங்கை ஊடகங்கள் – உரிமைகளுக்காக பொறுப்புடன் முன்னோக்கிய நடையில்” எனும் தொனிப்பொருளின் கீழ், ஒன்லைன் மூலம் இடம்பெற்ற இந்நிகழ்வுடன் இணைந்தவாறு FMETU இனது 9ஆவது தேசிய பிரதிநிதிகள் மாநாடும் (2023.11.23) நடைபெற்றது.

இதற்காக உறுப்பினர்களுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கூகிள் படிவம் வழங்கி பதிவு செய்யப்பட்டதோடு, அதற்காக அழைக்கப்பட்ட 125 பேரில் சுமார் 105 பேர் பதிவு செய்திருந்தனர். ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் இந்த மாநாட்டில், இலங்கையில் இன்று ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து ஊடகவியலாளர்களுக்குக் தெளிவூட்டல் மற்றும் ஒரு முன்னணி ஊடக அமைப்பாக FMETU ஐ வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இவ்வருட நிகழ்ச்சித்திட்டம் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள FMETU உறுப்பினர்களின் கூட்டுப் பங்கேற்புடன், 2024/2025 இற்கான ஏற்கனவே திட்டமிடப்பட்ட மூலோபாயத் திட்டம் மற்றும் எதிர்காலச் செயற்பாட்டின் திட்டமிடல் ஆகியன, உறுப்பினர்களிடையே மிக முக்கிய மையப் பொருளாக அமைந்திருந்தது.

“2024-2025 இற்கான சம்மேளனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் IFJ-UTU-2023” என்ற தலைப்பில், இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் தரிந்து உடுவரகெதரவினால் ஆரம்ப விரிவுரை முன்னெடுக்கப்பட்டது. IFJ-UTU-2023 திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட “மூலோபாய தலையீட்டுத் திட்டம் 2024-2025” பற்றி அவர் விரிவாக விளக்கியதோடு, இதில் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளையும் விளக்கினார். குறித்த விளக்கத்திற்குப் பின்னர் அது பற்றிய நேரடி விவாதத்தில் உறுப்பினர்கள் மிகவும் ஆவலுடன் பங்குபற்றியிருந்தனர். மூலோபாயத் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் உறுப்பினர்கள் பங்களித்தனர். இதற்காக உருவாக்கப்பட்ட கூகிள் படிவம் மூலம் 100 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் முன்வைத்த கருத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், 2024ஆம் ஆண்டின் பிரதிநிதிகள் மாநாட்டின் செயற்பாடுகள் முன்னைய தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட இந்திரா நவகமுவவின் தலைமையில் ஆரம்பமானது. கடந்த பிரதிநிதிகள் மாநாட்டின் அறிக்கை தர்மசிறி லங்காபேலியினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்திற்குப் பின்னர், 2024-2025 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான புதிய அதிகாரிகள் குழுவினர் நியமிக்கப்பட்டனர். இங்கு தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் குழு 09 உறுப்பினர்களைக் கொண்டதுடன், நிறைவேற்று உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 ஆகும். முழு நிர்வாகக் குழுவும் 25 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பொருளாளர் றிஸ்வான் சேகு மொஹிதீன் 2021-2022 கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தார், இது சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

2024 மற்றும் 2025 இற்கான FMETU செயற்றிட்டத்தைத் திட்டமிடுதல்!

இலங்கை ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் (FMETU) எதிர்வரும் 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு வருடங்களுக்கான செயற்றிட்டத்தை திட்டமிட முழு நாள் செயலமர்வவொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.

இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு, (IFJ-UTU) இனது 2023 ஆம் ஆண்டின் தொடர்ச்சியான முன்முயற்சியாகும். நாடளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முக்கியமான முயற்சியில் ஸ் ரீலங்கா ரெயின்போ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியமை மகிழ்ச்சியளிக்கிறது. பயிற்சியாளர்களான திலீப சமரசிங்க மற்றும் மஹீஷ்கா பெனாண்டோ ஆகியோரால் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் FMETU செயற்குழுவைச் சேர்ந்த 16 செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு தங்களது அமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான தமது சொந்த தீர்வுகளை கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டனர்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான எதிர்காலத் திட்டமிடலை ஒழுங்கமைப்பதற்கான முக்கிய விடயங்கள்

தலைப்பு, உப தலைப்பு மற்றும் நோக்கங்கள்

  1. ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றை வெற்றி கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல்.
  2. நலன்புரித் திட்டங்கள், சம்பள முன்மொழிவுகள் மற்றும் தொழில்முறை உரிமைகள்
  3. எமது முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது
  4. வருடாந்தம் ரூ. 1200 உறுப்பினர் சந்தாவை எவ்வாறு தொடர்ச்சியாக செலுத்துவது?
  5. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் (தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம், அரச ஊடக நிறுவனங்கள், தேசிய ஊடகவியலாளர் சங்கம்) மற்றும் இளம் ஊடகவியலாளர்களை அணிதிரட்டுவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள்.
  6. அரச ஊடக நிறுவனங்களில் தொழில்சார் சிக்கல்கள், கூட்டாக பேரம் பேசும் ஒப்பந்தம், பேச்சுவார்த்தை செய்யக்கூடிய திட்டங்கள், பிரதேச ஊடகவியலாளர்களின் சம்பளம், கொடுப்பனவு முறைகளை பெறுவதற்கான உத்திகள்
  7. FMETU உடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வலுப்படுத்துதல். ஒவ்வொரு ஊடகவியலாளர்கள்/ நிறுவனங்களை எவ்வாறு அணிதிரட்டுவது என்பதைக் கண்டறிதல்.
  8. FMETU.org இணையதளத்தைப் புதுப்பிக்க/ மேம்படுத்துதல். செய்திமடலை பிரசுரித்தல் தொடர்பில் திட்டமிடல். நியுஸ் புல்லட்டின் வடிவமைத்தல் மற்றும் திட்டமிடல்.
  9. ஊடகவியலாளர்களின் தொழில்முறை பயிற்சி (டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப ஊடகவியலார்களை மாற்றுதல்) – தொழில்முறை நிலை, தேவையான அறிவு, திட்டமிடல்
  10. சங்கத்திற்கான வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தல்

IFJ ஆதரவுடன் இடம்பெற்ற ‘FMETU அமைப்பின் திறன் கணக்காய்வு’ நிகழ்வு

சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் (IFJ) ஆதரவுடன் நடத்தப்பட்ட, FMETU அமைப்பின் திறன் கணக்காய்வு (Institutional Capacity Audit) நிகழ்வு அண்மையில் Rainbow Institute (ரெயின்போ நிறுவனம்) இல் இடம்பெற்றிருந்தது.

இந்த சுவாரஸ்யமான மற்றும் ஊக்கமளிக்கும் பட்டறையானது, IFJ இன் ஆசிய பசுபிக் பணிப்பாளர் திருமதி Jane Worthington அவர்களால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச ஊடகவியலாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

 

13 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரெயின்போ நிறுவனம் தனது முன்னுரிமைத் துறையாக ஊடக மேம்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் ஊடகவியலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் பாடுபட்டு வரும் FMETU அமைப்பிற்கு குறித்த பட்டறைய நடாத்துவது தொடர்பில் ஆதரவளித்திருந்தது.

இலங்கை முழுவதும் பரந்துள்ள ஊடகவியலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் ஊடகவியலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டு வரும் ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் (FMETU) இணைந்து Rainbow Institute (ரெயின்போ நிறுவனம்) ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

FMETU-IFJ-UTU – 2023 – சம்மேளனத்தின் கணக்காய்வு பட்டறைக்கான திட்டமிடல்!

FMETU சம்மேளனத்தின் கணக்காய்வு பட்டறைக்கான திட்டமிடல் கலந்துரையாடலானது, 2023 ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெற்றது. அதன் செயற்குழு மற்றும் இலங்கையின் பல்வேறு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர்கள் கூடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் பற்றி கலந்துரையாடினர்.

சம்மேளனத்தின் நிறுவன கணக்காய்வு தொடர்பான வசதிகளை வழங்குவதற்காக விரைவில் இலங்கைக்கு வரவுள்ள IFJ ஆசிய பசுபிக் பணிப்பாளர் திருமதி ஜேன் வொர்திங்டனை (Jane Worthington) வரவேற்க FMETU எதிர்பார்த்துள்ளது.

ஊடகவியலாளர்களின் தொழில் நிலை குறித்த ஆய்வு அறிக்கை மற்றும் காணொளி கையளிப்பு

உலகளாவிய தொழிற்சங்க திட்டத்தின் கீழ் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங் சம்மேளனமானது இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில்நிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஒரு தனித்துவமான கணக்கெடுபொன்றை நடத்தியது.


யாழ்.மாவட்ட ஊடகவியலாளர் கந்தசாமி செல்வகுமார் அவர்கள், ஊடகவியலாளர்களின் கணக்கெடுப்பு அறிக்கை மற்றும் தொழில்சார் பிரச்சினைகள் அடங்கிய 16 காணொளிகளை தொழில் அமைச்சரும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான மனுஷ நாணயக்காரவிடம் கையளித்தார்.

தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.விமலவீர, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகிர்த்தி, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறிலங்காபேலி, தலைவி கிருஷ்ணி கந்தசாமி இஃபாம், பொருளாளர் றிஸ்வான் சேகு முகைதீன், தேசிய ஒருங்கமைப்பாளர்டக்ளஸ் நாணயக்கார உள்ளிட்ட செயற்குழுவினர், மற்றும் செயற்குழுவினர், கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்கள் உட்பட ஏராளமான அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார,

ஒப்பந்த மற்றும் பகுதிநேர ஊழியர்களை என வேலை செய்பவர்கள் அனைவரின் தொழில் பாதுகாப்பை பாதுகாப்பதற்கான கொள்கை இருக்க வேண்டும். தொழில் அமைச்சு என்ற ரீதியில் தாம் இவ்வாறு பணியாற்றக் கடமைப்பட்டிருப்பதாகவும், பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றும் போது ஒப்பந்த மற்றும் பகுதிநேர ஊழியர்களை உள்ளடக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்வைத்ததாகவும் இது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தொழிலாளர் சட்டத்தை மாதங்கள் மற்றும் ஆண்டுகள் என தாமதப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை பாதுகாக்க தேவையான விதிகள் மற்றும் விதிமுறைகளை விரைவில் உருவாக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தொழிலாளர் அமைச்சர் முழு சட்ட கட்டமைப்பையும் நிறைவு செய்யும் என்று மேலும் அமைச்சர் கூறினார்.

 

இலங்கையின் தொழில்முறை ஊடகவியலாளர்களின் நிலை வெளிச்சத்திற்கு வந்தது!

ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி மற்றும் பிரதிப் பொதுச் செயலாளர் திருமதி இந்திரா நவகமுவ ஆகியோர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுடன் கடந்த 2022 நவம்பர் 22 ஆம் திகதி மேற்படி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இங்கு இலங்கையில் தொழில்துறை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் தொடர்பிலான நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இலங்கையிலுள்ள பெரும்பாலான தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கு அவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தொழில் உரிமைகள் எதுவும் இல்லை எனவும், இலங்கையில் அடிப்படை உரிமை கூட இல்லாத ஒரேயொரு தொழில், ஊடகவியல் தொழில் எனவும், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் அமைச்சருக்கு இதன்போது விளக்கமளித்தது.

 

ஊடகவியலாளர்களின் தொழில் நிலை மற்றும் ஊடகத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஊடகத்துறை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் நடத்திய தனித்துவமான ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக அமைச்சருக்கு இவ்விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டன.

சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் (IFJ) வழிகாட்டல் மற்றும் உதவியுடன் IFJ-Union to Union (UTU) Global Union 2022 ஊடக தொழிற்சங்க சங்கங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் ஊடகத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தான விரிவான கலந்துரையாடலை, ஊடகவியலாளர்களின் பரந்தளவிலான பிரதிநிதித்துவத்துடன் எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி நடத்துவதற்கும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன்போது உறுதியளித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிலமுறைசார் வளர்ச்சியினுடைய டிஜிட்டல் சகாப்தத்தில் ஊடக அமைப்புகள் புதிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன!

இலங்கை ஊடகத்துறையின் தொழில்முறை நிபுணத்துவத்தை மேம்படுத்த, இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகள் மீது கவனம் செலுத்துவது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் அண்மையில் வெற்றிகரமாக இடம்பெற்றன. 2022 ஆம் ஆண்டுக்கான இந்த தொடர் நிகழ்ச்சித்திட்டமானது சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் வழிகாட்டுதலினுடாக ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் இளம் ஊடகவியலாளர்கள் தங்களின் தொழில்சார் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை புரிந்துகொண்டு டிஜிட்டல் யுகத்தில் திறம்பட செயல்பட அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள இளம் ஊடகவியலாளர்கள்; தொழில் ரீதியில்; அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண ஆதரவளித்ததுடன், தொழிற்சங்கத்தின் மூலம் தங்களை ஒரு கூட்டமைப்பாக  இருந்து  இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் ஆக்கபூர்வமான வழிகளை கடைப்பிடிப்பதற்கு ஊடகவியலாளர்கள் வழிகாட்டப்பட்டனர்.

டிஜிட்டல் சகாப்தத்தின் பின்னணியில், ஊடகத்துறையில் நுழைவதற்கு நவீன திறன்களைக் கொண்ட இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குதுவதற்கு ஊடக நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன. இதற்கேற்றவாறு ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இளம் ஊடகவியலாளர்ள் இத்துறையில் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்வதற்காக பாடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், முதற்கட்டமாக ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் 200 ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. அவர்களின் உரிமைகள் மற்றும் இதர பிரச்சினைகள் மற்றும் ஊடக தொழிற்சங்கங்களின் கூட்டு முயற்சியின் மூலம் அவர்கள் எவ்வாறு உரிமைகளைப் பெறுவது என்பது குறித்து இங்கு கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்றன. இந்த கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இடம்பெற்றன. சிங்கள மொழி மூலமான 140 ஊடகவியலாளர்களும், தமிழ் மொழி மூலமாக 60 பேரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது கட்டத்தில் ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ள, அனைத்து மாகாணங்களைச் சேர்ந்த 340 ஊடகவியலாளர்களின் தொழில் நிலை குறித்த கணக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த கணக்கெடுப்பின் ஒரு தனித்துவமான அம்சமாக உறுப்பினர்கள் தற்போது கடமையாற்றும்  ஊடக நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள தொழில்முறைசார் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஊடகத்துறையின் முதுகெலும்பாக விளங்கும் பிரதேசவாரியான நிருபர்களுக்கு  பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் அடையாளம் காணப்பட்டன. செய்திகளை அனுப்பும் ஊடகவியலாளர்கள் பலர், குறிப்பாக, அடிப்படை தொழிலாளர் உரிமைகளை அனுபவிப்பதில்லை என்பதும், அற்ப ஊதியம் மற்றும் மிகக் குறைந்த நிதியுதவியுடன் தங்கள் ஊடக கடமைகளை நிறைவேற்றுவதில் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணையத்தளமான www.Fmetu.org யில் பதிவிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக 20 இளம் ஊடகவியலாளர்களுக்கு கையடக்கதொலைபேசி ஊடகவியல் (Mobile Journalism) திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 21 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த பயிற்சியில் 30% தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டதோடு, 30% பெண் ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.  கொழும்பில் நடைபெற்ற இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை,  இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் ஊடக நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சமீர திலக்கவர்தன மேற்கொண்டிருந்தார்.

பயிற்சியைத் தொடர்ந்து, இந்த ஊடகவியலாளர்கள். இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் தொழில்முறைசார் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி 17 வீடியோக்களை தயாரித்தனர். இந்த வீடியோக்கள் தற்போது ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளதோடு, YouTube தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில்சார் நிலை மற்றும் உரிமைகள் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்று தொகுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொழில் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் உள்ளிட்ட  சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் வெற்றிக்கும் விலைமதிப்பற்ற வழிகாட்டல் மற்றும் ஆதரவிற்காக   சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் பணிப்பாளர் திருமதி ஜேன் வொர்திங்டன் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் சகாக்களுக்கு, ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தனது நன்றியைத் தெரிவிக்கிறது.

இளம் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை வலுவூட்டி, அடிப்படை தொழில் உரிமைகளை உறுதிப்படுத்தல்!

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய இளம் ஊடகவியலாளர்கள் குழுவொன்று, 2022 செப்டெம்பர் 03ஆம் திகதி டிஜிட்டல் ஊடகம் தொடர்பான மேம்பட்ட பயிற்சிப்பட்டறையொன்றி இணைந்தது.

ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் IFJ – UTU திட்டத்தின் மூலம் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் (FMETU) இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் பயனுள்ள ஊடகவியலில் ஈடுபடுவதற்கும், தொழில்சார் ஊடகவியலாளர்களின் அடிப்படை தொழில் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களை வலுவூட்டுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இம்முழுத் திட்டமும் கையடகத்தொலைபேசி ஊடகவியல் (MoJo- Mobile Journalism) தொடர்பான செயற்பாட்டு பயிற்சியைக் கொண்ட ஒரு பயிற்சித் திட்டமாகும். இந்த நிகழ்ச்சியின் பிரதான பயிற்றுவிப்பாளராக டிஜிட்டல் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்ற கலாநிதி சமிர திலகவர்தன கலந்து கொண்டார். அவர் திறந்த பல்கலைக்கழகத்தில் இத்துறை தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளராவார். நிகழ்ச்சியில் இணைந்த இளம் பத்திரிக்கையாளர்கள் இந்த விடயத்தைப் பற்றிய அதிகளவான விடயங்களை கற்றுக்கொண்டதோடு, குழுவாகப் பிரிக்கப்பட்டு குறும் வீடியோக்களை தயாரிப்பதில் ஈடுபட்டு, ஒவ்வொரு குழுவும் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி வித்தியாசமான வகையில் வீடியோக்களை தயாரித்து காண்பித்தனர்.

பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள் தங்களின் தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் ஊடகத் துறை தொடர்பான சிக்கல்களை முன்னிலைப்படுத்தும் வீடியோக்களை சமர்ப்பிப்பார்கள் என்பதுடன் குறித்த வீடியோக்கள் fmetu.org இணையத்தளத்தில் பதிவேற்றப்படவுள்ளன.

இதற்கான வழிகாட்டல் மற்றும் வள பங்களிப்புக்காக சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்திற்கும் (IFJ), இதற்கான பயிற்சியை வழங்கிய கலாநிதி சமிர திலகவர்தன, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முடிக்க ரெயின்போ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் நன்றி தெரிவித்துள்ளது.

உங்களிடம் கேள்விகள் உள்ளதா? அழைக்கவும் அல்லது சந்திக்கவும்

+[94] 773 641 1111

# 30,
அமரசேகர மாவத்தை, கொழும்பு 5,
இலங்கை.

info@fmetu.org 

செய்திமடல்

சமீபத்திய செய்தி மற்றும் புதுப்பிப்பைப் பெறுங்கள்

எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

© 2021 – FMETU. All rights reserved.

Carefully crafted by Cyber Ceylon